இந்த பதிவின் ஆதியிலே அந்தத்தை எழுதி விடுகிறேன். ஹே ராம் படத்தின் இறுதியில் சாகேத் ராமன் துஷார் காந்தியிடம் " Mr.Gandhi, I have the most extraordinary story to tell you. Its your story too, in fact its ours" என்று சொல்வதை போல, இந்த பதிவு எனது கதை மட்டுமல்ல, நமது கதை. (ஹே ராம் படத்தை பற்றி எழுத, ஐந்து blog பதிவாவது தேவைப்படும். சமீபத்தில் இயக்குனர் மணிகண்டன் அவர்களின் நேர்காணல் பாருங்கள்). ஒத்த கருத்துக்கள் உடையவர்களுடன் சேர்ந்து உரையாடுவதே சுவர்க்கம் (சொர்க்கம்) என்ற நாலடியார் பாடலை நினைவில் கொண்டு, ரயிலை கண்ட உடனே palpable மகிழ்ச்சி கொள்ளும் என்னை போல், உங்களை போல் இருக்கும் ரயில் காதலர்களை பற்றியதே இந்த முயற்சி (இதை படிக்கும் சிலர் அங்கே குமிழ் சிரிப்பது எனக்கு தெரிகிறதே?! quantum empathy போலும் 😊).
என்னுடைய ரயில் பயணம் மீட்டர் guage வண்டிகளில் - மரப்பலகை கொண்ட இருக்கைகள் இருந்ததே அப்பொழுது தொடங்கியது. எளிதாக சொன்னால், சைடு லோயர் மற்றும் சைடு அப்பர் பெர்த் கிடையாது, கொஞ்சம் குறுகிய ரயில்கள். என் நினைவில் முதன் முதலில் சென்ற ரயில் சென்னை திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்! குருதிப்புனல் முன் பகுதியில் எழும்பூர் ரயில் நிலையத்தில் ஒரு சண்டை காட்சியின் போது ஒரு ராட்சஷ கடிகாரம் தொங்குமே, நினைவிருக்கிறதா? அதில் இரவு 9.15 மணிக்கு கிளம்பியது மலைக்கோட்டை ரயில்.
எனக்கு சிறு வயதிலிருந்தே ரயில்களை பற்றி தெரிந்து கொள்ள ஆசை. அப்பா மார்க்கெட்டிங் வேலையில் இருந்ததால், அவருக்கு ரயில் டிக்கெட் வாங்கும் பணி எனக்கு. முதலில் பீச் ரயில் நிலையத்தில் வாங்கிய மெல்லிய ஞாபகம். பின்னர் எங்கள் பகுதியில் உள்ள திருமயிலை ரயில் நிலையத்தில் ஒரு முன்பதிவு அலுவலகத்தை திறந்து விட, மாதம் இரண்டு மூன்று முறை சைக்கிள் எடுத்து கொண்டு போவேன். அங்கே முன்பதிவு படிவத்தை நிரப்பி வரிசையில் நின்று டிக்கெட் வாங்க வேண்டும். அவ்விடம் பரிமாண வளர்ச்சி அடைந்து, அங்கே இருக்கைகள் போட பட்டது. அமர்ந்த படி, அருகிலிருப்பவர்களுடன் பேசி கொள்ளலாம். அங்கே பேனா இல்லாமல் வருவார்கள், படிவத்தை சரியாக நிரப்ப மாட்டார்கள், சில்லரை இருக்காது. ஒரு ரயில் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு செல்லும் போது ஒரு ரயில் நம்பரும், திரும்பி வரும் போது வேறொரு நம்பரும் கொண்டிருக்கும். அதை மாற்றி எழுதி ரயில்வே ஊழியரிடம் தர்க்கம் செய்வார்கள். ஒரு ரயில் டிக்கெட் வாங்கி கொண்டு வர, இரண்டு மணிநேரமும் நிறைய சம்பவங்களுமும் ஆகும்.
ரயில்வேத்துறை பட்ஜெட்டிற்கு பிறகு, அந்த ஆண்டிற்க்கான ரயில் அட்டவணையை ஒரு புத்தகமாக வெளியிடும், அதை படித்து புரிந்து கொள்வதே ஒரு இனிமையான சவாலாக இருக்கும். நிறைய குறியீடுகளும், சுருக்கெழுத்துக்களும் கொண்ட அந்த அட்டவணை என் அப்பா தவறாமல் வாங்குவார். (புது புத்தகங்களை முகர்ந்து பார்க்கும் பழக்கம் உங்களுக்கு உண்டா?) என்னுடைய ஆர்வம் ரயில்வே அட்டவணை புத்தகத்தை பார்ப்பதில் மட்டுமல்ல, வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் கேரளாவில் இருந்து வரும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலையும், தூத்துக்குடியில் இருந்து வரும் ரயிலையும் coupling செய்வதை நின்று பார்ப்பதிலும் இருந்தது. லோகோ pilots ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பிரம்பினால் ஆன ஒரு வளையத்தை தூக்கி எறிவார்கள். அது ஒற்றை தடத்தின் Token exchange system பற்றியது என்று தெரிந்து கொண்டேன். பாம்பன் பாலத்திற்கு முன் பொறுத்த பட்டுள்ள three-cup anemometer எனும் கருவி, காற்றின் வேகத்தை தொடர்ந்து பதிவு செய்து கொண்டே இருக்கும். மேலும் அந்த கருவி அங்குள்ள ரயில்வே சிக்னலுடன் இணைக்க பட்டுள்ளது. காற்று அபாயகரமான வேகத்தை பெற்றால், ரயில்வே சிக்னல் சிகப்பாக மாறும். இதே போல் ஜப்பானில் Fujino – ushijima என்னும் ஒரு இடத்திலும் இருப்பதை தெரிந்து கொண்டு, "Connect pamban and Fujino – ushijima" என்று CA instituteல் நடந்த ஒரு விநாடி-வினாவில் கேள்வியாக வைத்தேன்.
கொஞ்சம் தற்பெருமையை தள்ளி வைத்து, நான் எழுத வந்ததை பற்றி காண்போம். என் பயணமானது, சிறுவயதில் - முன்பதிவில்லாத ரயில்களில் பயணம் செய்வதில் தொடங்கி, இப்பொழுது எல்லாம் "third AC" வேண்டாம் - "second AC" தான் வேண்டும் என்ற பொருளாதார நிலைக்கேற்ப வந்திருக்கிறது. Dr.மன்மோகன் சிங் அவர்களுக்கு கோவில் கட்ட வேண்டும். சிலருக்கு பகல் ரயில்கள் பிடிக்கும், சிலருக்கு இரவில் செல்லும் ரயில்கள் தான் பிடிக்கும். எனக்கு இரண்டுமே பிடிக்கும். பிடிக்கும் என்றால், அலாதி பிரியம். பகல் வேளையில் ஜன்னல் சீட் கிடைத்தால் போதும், இரண்டு -மூன்று காபி, பேசி கொண்டு வர ஒரு நண்பன், போதுமெனக்கு. ஒவ்வொரு நீர் நிலைகளையும் பார்ப்பேன், ப்ளூ ஜே மற்றும் மீன்கொத்தி (Kingfisher) வகை பறவைகளை ரசிப்பேன், அதன் நீலமே எனக்கு பிடிக்கும். திருநெல்வேலி செல்லும் போது, ரயில் விருதுநகரை தாண்டியவுடன், செம்மர நிறத்தில் மண்பூமியில் மயில்களை பார்ப்பது ஒரு சுகம். பிரிட்டிஷ் இந்தியாவின் சில சுவடுகள் ரயில் நிலையங்களில் காணலாம். பெரும்பாலான ரயில் நிலையங்களில் ஆல மரம், அரச மரம் இருக்கும். அதை பார்ப்பதே அவ்வளவு அழகு. மேலும் இந்த ரயில் நிலையங்களில் உள்ள மரங்களில் அதிகாலை மற்றும் பொழுது சாயும் நேரத்தில், அங்கிருக்கும் பறவைகள் அனைத்தும் ஒன்றாக சத்தமிடும். நூற்று கணக்கான பறவைகள் (பெரும்பாலும் கிளிகள்) attendance எடுக்கும் போல, "காலையில் போன முருகன் வந்துட்டானா? அப்போ பிரியா எங்கே? சுகுமார் இன்னும் திரும்ப வரலே?" போன்ற உரையாடல்கள் போல. இதை நீங்கள் அனுபவிக்க, மயிலாடுதுறைக்கு அதிகாலை போய் சேரும் ரயிலிலோ, மேட்டுப்பாளையத்தில் இருந்து மாலை கிளம்பும் நீலகிரி எக்ஸ்பிரஸ்கு ஒரு மணிநேரம் முன்னரே சென்றாலோ பார்க்கலாம்.
முழுநிலா இருக்கும் போது இரவு பயணம் ஒரு வகை, அமாவாசை ஒட்டிய காலத்தில் இரவு பயணம் வேறு ஒரு வகை. அமாவாசை இருட்டில், நட்சத்திரங்கள் பளிச்சென்று மின்னும்! பெரும்பாலானோர் கீழ் பெர்த் விரும்புவார்கள், சிலர் தொந்தரவில்லாமல் தூங்குவதற்கு, upper பெர்த் விரும்புவார்கள். எனக்கு upper பெர்த் கிடைக்க, இந்த மாதிரி சயன-பிரியர்கள், தங்களது லோயர் பெர்த்தை என்னுடன் மாற்றி கொடுத்தால், என் ராஜ்ஜியத்தில் பாதி எழுதி கொடுத்துவிடுவேன். நான் ஒன்பதாவது படிக்கும் போது, குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்றோம். நள்ளிரவு, புதுக்கோட்டையில் ரயில் நின்றது, சிக்னல் கிடைக்கவில்லை போல, ஒரு அரை மணி நேரம் அங்கே நின்றது. என்னுடன் பயணித்த அனைவரும் உறங்கி கொண்டிருக்க, நான் ரயிலிருந்து இறங்கி, ரயில்வே platform உள்ள கருங்கல் பெஞ்சில் படுத்து, திருவிளையாடல் சிவாஜி போல, வானத்தை பார்த்து கொண்ட ஞாபகம் என் நினைவிலிருந்து நீங்காது. அதே ரயில் கொஞ்ச நேரத்தில் தேவகோட்டை ரோடு சென்றடைந்ததும், அதே போல் நடந்தது. கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா? என்ற விளம்பரத்தில் வருவது போல கடவுள் என்னிடம் கண்ணடித்தார்.
சைடு லோயர் சீட் மீது எனக்கு ஒரு பிரத்யேக ஆசை. எதிரெதிரே உட்கார்ந்து கொண்டும், பேசி கொண்டும் வர அது ஒரு அற்புதமான அமைப்பு. மூன்று சீட்களில் நடுவில் உட்காரும் பயணம் எனக்கும் ஓரத்தில் அமர்ந்திருப்பவருக்கும் சிரமமானது. நான் அனேகமாக அணைத்து ரயில் நிலையங்களிலும் இறங்கி ஏறுவேன். மேலும் சில இடங்களில் நான் கதவருகே நிற்க ஆசை படுவேன். முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு முன் வரும் கரும்பாலை வாசம் பிடிக்க, பாம்பன் பாலத்தில் இருந்து கடலை காண, கொள்ளிடம் மற்றும் காவிரி ஆற்று பாலத்தில், திருப்பதி செல்லும் வழியில் ஏகாம்பரக்குப்பம் எனும் ரயில் நிலையத்தை காண (அந்த ரயில் நிலையத்தின் ஒரு platformக்கும் மற்றொரு platformக்கும் உயரம் அதிகம் இருக்கும். திருநெல்வேலி முதல் செங்கோட்டை செல்லும் வழியெங்கும் என்று பல நுட்பமான பயண விவரங்கள் உள்ளது. இவை அனைத்தும் மற்றொருவர் கண்ணுக்கு புலப்படாமல் போகலாம், எனக்கு இதெல்லாம் முக்கியமானவை.
அதே போல், ரயில் நிலையங்களின் அமைப்பு என்னை ஈர்க்கும். நான் விரும்பி செல்லும் ஊர்களில் மைசூரும், கொடைகானலும் முக்கியமானவை. கோடை ரோடு ரயில் நிலையமே என்னை உற்சாக படுத்திவிடும். மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலை நிறைய கடைகள் இல்லாமல், வீடுகள் அதிகம் இருக்கும் residential பகுதியில் அமைந்திருப்பது ஆச்சரியமே. திட்டை என்னும் ஊரின் ரயில் நிலையத்தை வெளியிலிருந்து பார்ப்பதற்கு அமைதியாக இருக்கும். திருவாலங்காடு ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்து, ஷேர் ஆட்டோ பிடித்து கோவில் செய்ய வாகாக இருக்கும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பல முறை ஸ்கூட்டர் நிறுத்தி விட்டு ரயில் ஏறி இருக்கிறேன். திருச்சூர் ரயில் நிலைய வாயிலில் ஆட்டோக்கள் அனைத்தும் வரிசையாக வந்து பயணிகளை ஏற்றி செல்வது ஆச்சரிய ஒழுக்கம்.
நெடுந்தூர ரயில் பயணங்கள் பெரும்பாலும் எனக்கு கிடைத்ததில்லை. ஒரு முறை அலுவலக பணிக்காக மும்பை சென்றேன், 24 மணி நேரம்! கூட பயணித்த இருவரில் ஒருவர், எனக்கு நேர் எதிர் எண்ண ஓட்டம் கொண்டவர், ஜன்னலின் திரைசீலையை மூடிவிட்டு, பயணத்தின் பெரும்பாலான நேரம் உறங்கி கொண்டே வந்தார், வெறுத்து போனேன். மும்பைக்கு பத்து பதினைந்து முறைக்கு மேல் விமானத்தில் சென்றிருக்கிறேன், ஆனாலும் அந்த ரயில் பயணம் மட்டும் நினைவில் இருக்கிறது. வேறொரு முறை குடும்பத்துடன் நாக்பூர் செல்லும் வாய்ப்பு அமைந்தது. காலை பில்டர் காபி குடிக்க முன்னரே திட்டமிட்டு கும்பகோணம் decotion பாட்டில் ஒன்றை வாங்கி விட்டோம். நானும் என் மனைவியும் கிட்டத்தட்ட பத்து பெட்டிகள் தாண்டி இருந்த pantry க்கு சென்று சூடான பால் வாங்க முயற்சி செய்தோம். அந்த ஊழியருக்கு ஹிந்தி மட்டுமே தெரிந்திருந்தது. நான் பேசியது ஹிந்தியே இல்லை. ஏதோ வகையில் சமாளித்து ஒரு நல்ல காபி கிடைத்தது.
இப்பொழுது எல்லாம், என் பிள்ளைகளுக்கு ரயில் பயணங்களை பற்றிய கதைகளை இரவு கூறுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். ICF ரயில் அருங்காட்சியகம் (museum) ரெண்டு மூன்று முறை சென்றிருக்கிறோம். mysoreல் உள்ள அருங்காட்சியகமும் அருமையாக இருக்கிறது. அங்கே உள்ள toy trainல் சுற்றி இருக்கிறோம். சிக்மகளூர் காந்தி பூங்காவிலும், ஊட்டி ஏரியை சுற்றியும், கோவை காந்தி பூங்காவிலும் Toy Trainல் சென்றிருக்கிறோம். சிறு வயதில் பள்ளி இன்ப சுற்றுலாவில் எங்கோ ஒரு இடத்தில் toy trainல் சுற்றும் போது ஏற்பட்ட மகிழ்ச்சி அப்படியே இருக்கிறது. முன்பகுதியில் நான் சொன்ன இரண்டு ரயில்களை இணைக்கும் coupling முறையை ஈரோடு ரயில் நிலையத்தில் என் பிள்ளைகளுக்கு உற்சாகத்துடன் காண்பித்தேன்.
சுஜாதாவின் "ஓடாதே" எனும் கதையின் இடையில், காட்பாடி ரயில் நிலையத்தில் அந்த கதாநாயகனும் கதாநாயகியும் காத்திருக்க, "கர்நாடகா எக்ஸ்பிரஸ் என்றைக்கோ புதுதில்லியில் கிளம்பி, நாயடி பட்டு லேட்டாக வந்தது" என்று எழுதியிருப்பார். அந்த வரியை படித்து நான் ஒரு அரை மணி நேரம் சிரித்திருக்கிறேன். பேராசிரியர் ஞானசம்பந்தம் அவர்களின் அனைத்து ரயில் ஜோக்குகளை பல முறை கேட்டு சிரித்திருக்கிறேன். mission impossible படத்தில் வரும் ரயில் stunt sequence என்னை மிகவும் கவர்ந்தது.
சென்னையின் புறநகர் ரயில் பயணங்களில் என்னுடன் சேர்ந்து கொள்வது என் மாமா. நானும் அவரும், பழமையான கோயில்களுக்கு செல்வோம். அவ்வாறு திரும்பி வரும் பொழுது, ஒரு முறை, "Situational irreverence theory" படிக்காமலேயே, சுற்றுசூழலை உதறி தள்ளி, ரயில் பெட்டியின் கதவருகில் உட்கார்ந்து கொண்டு இளையராஜா பாடல்களை பாட ஆரம்பித்தோம். பக்கத்து பெட்டி பயணிகள் எங்களை யாசகர்களாக எண்ணியிருப்பதை நாங்கள் பொருட்படுத்தவே இல்லை.
இந்த "Feel-good" பதிவுக்கு முடிவுரை எழுதாமல், AI (செயற்கை நுண்ணறிவு) மூலம், "Summarise this blog" என்ற prompt கொடுத்தால்: ரயில் - சாகேத் ராம் - நாலடியார் - மலைக்கோட்டை - அட்டவணை - coupling - மீன்கொத்தி - இரவுநேர நட்சத்திரங்கள் - toy train - சுஜாதா - irreverence - மகிழ்ச்சி என்று தருமோ என்னவோ!